
டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் இரு நாடுகளும் 30 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
2015ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக அளவை 20 பி்ல்லியன் டாலருக்கு உயர்த்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கட்டித் தரவும் ரஷ்யா சம்மதித்துள்ளது. மேலும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் சந்திப்பிற்குப் பின் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பிற நாடுகளுடன், இரு நாடுகளும் வைத்துள்ள உறவுகளையும் தாண்டி மேலும் வலுவடையும், உறுதியாக இருக்கும், ஸ்திரமுடன் நீடிக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரஷ்யாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் இந்தியா.
இந்தியாவும், ரஷ்யாவும், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கட்டுவது தொடர்பாக விவாதித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாட்டை அதிகரிப்பது என்றும் முடிவாகியுள்ளது.
தீவிரவாதத்தால் இந்தியாவைப் போலவே ரஷ்யாவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இரு நாடுகளும் இந்தப் பிரச்சினையின் ஆழத்தையும், விபரீதத்தையும் நன்கு உணர்ந்துள்ளன. புலனாய்வு, உளவு, தகவல் பரிமாற்றம், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படும் என்று கூறினார்.
ரஷிய அதிபார் மெத்வதேவ் பேசுகையில், ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராகும் முழுத் தகுதியும் இந்தியாவுக்கு உள்ளதாக ரஷ்யா கருதுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும்போது நிச்சயம் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
தீவிரவாதிகளுக்கு எந்த நாடும் அடைக்கலமோ, அங்கீகாரமோ தர முடியாது. அப்படி தரும் நாடு நாகரீகமடைந்த நாடாக கருதப்பட முடியாது. தீவிரவாதிகள் கடும் தண்டனைக்குரியவர்கள் என்பது ரஷ்யாவின் கருத்தாகும் என்று கூறினார்.
thanks to: http://www.inneram.com
No comments:
Post a Comment